சென்னை: பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நடிகை மீரா மிதுனை இன்னும் பிடிக்க முடியவில்லை என்று எழுத்துபூர்வமாக அறிக்கையை தாக்கல் செய்வதா என்று செஷன்ஸ் நீதிமன்றம் காவல் துறையை கண்டித்துள்ளது. பட்டியலினத்தவர்கள் குறித்து அவதுாறாக பேசி, சமூக வலைதளத்தில், ‘வீடியோ’ வெளியிட்ட நடிகை மீரா மிதுன் மீது பல்வேறு அமைப்புகள் புகார் தெரிவித்தன. இதையடுத்து, அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் மீரா மிதுன் மற்றும் அவருக்கு உதவிய அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டனர். பின்னர் இருவரும் ஜாமீனில் வெளிவந்தனர். அதன் பிறகு மீரா மிதுன் தலைமறைவாகிவிட்டார். அவருக்கு முதன்மை அமர்வு நீதிபதி அல்லி ஜாமீன் வெளிவராத பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.
வழக்கு கடந்த இரு முறை விசாரணைக்கு வந்தபோது, மீரா மிதுனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் பெங்களூரு சென்றுள்ளதாக அரசு சிறப்பு வழக்கறிஞர் எம்.சுதாகர் தெரிவித்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதி அல்லி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு சிறப்பு வழக்கறிஞர் அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், கர்நாடக மாநிலம், பெங்களூரில் தலைமறைவாக இருக்கும் மீரா மிதுனை தேடி பார்த்ததில் அவர் அங்கு இல்லை என்று தெரியவந்துள்ளது. விரைவில், அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று கூறப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதி, 5 மாதங்களாக பிடிவாரன்டை அமல்படுத்தாத போலீசாரின் இயலாமைக்கு கண்டனம் தெரிவித்து விசாரணையை ஜனவரி 19ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.